சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துப் பயிற்சிக் கழகத்தின் பொது வரவேற்பு நாளன்று அங்கு வருகைத் தரும் பார்வையாளர்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கான பயிற்சி மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி குறித்து அறிய முடியும்.
இது மட்டுமன்றி பொதுமக்கள் பல்வேறு விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம் எனச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) திங்கட்கிழமை (மார்ச் 4) தெரிவித்தது.
“கண்டுபிடி, அனுபவி, விளையாடு” என்ற கருப்பொருளில் சிஏஏஎஸ்சின் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் இந்த மூன்று நாள் பயிற்சியானது மார்ச் 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.
எண் 1, ஏவியேஷன் டிரைவில் இருக்கும் பயிற்சிக் கழகம் பார்வையாளர்களுக்காகக் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.