ஜெருசலம்: காஸாவின் ராஃபா நகரில் ராணுவத் தாக்குதல் மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிடுவது குறித்து சிங்கப்பூர் கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ராஃபாவில் தங்கியுள்ள கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் அதனால் பாதிக்கப்படுவர் என்பதை அவர் சுட்டினார். மார்ச் 19ஆம் தேதி, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
காஸாவிற்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக மனிதநேய அடிப்படையில் உடனடிச் சண்டைநிறுத்தம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கை நிலவினாலும் தற்போது நடைபெற்றுவரும் சண்டைநிறுத்தப் பேச்சுகளின் முடிவு அவ்வளவாக நம்பிக்கை அளிக்கவில்லை என்றார் அவர்.
ராஃபாவில் தரைவழித் தாக்குதல் மேற்கொள்ளும் திட்டத்தை நிறுத்திவைக்கும்படி அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளே இஸ்ரேலுக்கு நெருக்குதல் தருகின்றன.
காஸாவில் ஹமாஸ் போராளிகளைத் துடைத்தொழிக்க அந்தத் தாக்குதல் நடவடிக்கை அவசியம் என்கிறது இஸ்ரேல்.
அனைத்துலக நெருக்குதலுக்குப் பயந்து தாக்குதல் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று திரு நெட்டன்யாகு சூளுரைத்துள்ளார்.
ராஃபாவில் தாக்குதல் நடந்தால் இஸ்ரேலுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்று கூறினார்.
“இறுதியில், இஸ்ரேல் சார்பில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு திரு நெட்டன்யாகுவின் கைகளில் உள்ளது. இஸ்ரேலிய மக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. தாக்குதலின் பின்விளைவுகளுக்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தமது 10 நாள் மத்திய கிழக்குப் பயணத்தின்போது, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், அதிபர் இஸாக் ஹெர்சோக், முன்னாள் பிரதமர் நஃப்டாலி பென்னட் போன்றோரையும் அமைச்சர் சந்தித்துப் பேசினார்.
அந்தச் சந்திப்புகள் குறித்துப் பேசிய அவர், இஸ்ரேலியத் தலைவர்கள் வெளிப்படையாகவும் சில நேரங்களில் கடுமையாகவும் பேசியதாகக் குறிப்பிட்டார். அவர்கள் நாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டாலும் இதனால் அவர்களின் திட்டங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று கருதுவதாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிங்கப்பூரின் இரங்கலை அவர் தெரிவித்துக்கொண்டதாக வெளியுறவு அமைச்சு கூறியது. பயங்கரவாத நடவடிக்கைகளை சிங்கப்பூர் கண்டிப்பதாகவும் அவர் வலியுறுத்தியதாக அது குறிப்பிட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கவும் காஸாவில் உதவிப்பொருள்களை விரைவாகவும் இடையூறு இன்றியும் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யும்படி இஸ்ரேலுக்கு அவர் அழைப்புவிடுத்ததாக அமைச்சு கூறியது.