முஸ்லிம் லீக் ( சிங்கப்பூர்) சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் குழுவான வளர்பிறை மகளிர் வட்டம் மார்ச் மாதம் 3ஆம் தேதி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பனானாலீஃப் அப்போலோ உணவகத்தில் விருது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
வளர்பிறை மகளிர் வட்டத் தலைவி திருமதி மஹ்ஜபீன் வரவேற்புரை ஆற்றினார். சமூக மேம்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் சேவையாற்றிவரும் திருமதி புஷ்பலதா நாயுடு, அடித்தள தலைவர் திருமதி ஜோ வின் லீ, ஜாமியா சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி ரோஸா அஹமது, மலேசியாவின் திருவாட்டி நஸ்ரின் அய்யூப் ஆகிய நால்வருக்கும் வளர்பிறை விருது வழங்கப்பட்டது.
முஸ்லிம் லீக் சிங்கப்பூர் தலைவரும், மூத்த சமூக அடித்தளத் தலைவருமான மு. ஜஹாங்கீர் விருதாளர்களின் சேவைகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
வளர்பிறை விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினரும் சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினரும், சிங்கப்பூர் முஸ்லிம் மகளிர் சங்க உதவித் தலைவரும், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியருமான முனைவர் ரஸ்வானா பேகம், பல்லின சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதை வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து அவர் வழங்கிய சிறப்புரையில் பெண்கள் பற்றிய 2021 உரையாடலின் போது விவாதிக்கப்பட்ட மூன்று முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்தார்.
[ο] பணியிடத்தில் சம வாய்ப்புகளைப் பெறுவதில் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்க நாம் ஒன்றுபட வேண்டும். தனிநபர்கள் தங்கள் சொந்த பணியிடங்களுக்குள் நியாயமாக நடத்தப்படுவது மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளுக்காக வாதிடலாம். திறமை மற்றும் தகுதியை ஊக்குவிப்பதன் மூலம், ஒவ்வொரு நபரும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிக அளவிலான வாய்ப்புகளை உருவாக்கி பங்களிக்க முடியும்.
[ο] இரண்டாவதாக, பராமரிக்கும் பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் பெண்களுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்க நாம் ஒன்றுபட வேண்டும், வேலை செய்யும் தாய்மார்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு நடைமுறை உதவி மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க சமூகங்கள் ஒன்றிணையலாம். சமூகம் சார்ந்த குழந்தைப் பராமரிப்பு முயற்சிகளை ஒழுங்கமைத்தல், வீட்டுப் பணிகளில் உதவி வழங்குதல் அல்லது சவாலான காலங்களில் தனிநபர்கள் சார்ந்து இருக்க ஒரு ஆதரவான கட்டமைப்பை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
[ο] மூன்றாவதாக, பொதுவெளி மற்றும் இணையத் தளங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்போது, மின்னிலக்கப் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்குரிய நடத்தை குறித்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் கல்வி கற்பதற்கு தனிநபர்கள் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கலாம். இணையப் பாதுகாப்பு மற்றும் இணையவழி சமுதாய ஒழுங்குமறை குறித்த பட்டறைகள் அல்லது இணையவழி படிப்புகளில் பங்கேற்பதுடன் அவர்களின் சொந்த சமூக வட்டங்களுக்குள் தீங்கிழைக்கும் மனப்பான்மை மற்றும் நடத்தைகளை தீவிர சவாலாக எடுத்துக் கொள்வதும் இதில் அடங்கும்.
பாலின சமத்துவத்திற்காக நாம் பாடுபடுகையில், தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் எடுக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைக் கருத்தில் கொள்வோம் என தமது ஆழமான கருத்துகளை முன் வைத்தார்.
இறுதியாக வளர்பிறை மகளிர் வட்ட ஆலோசகரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவருமான திரு முஹம்மது பிலாலின் நிறைவுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. அமைப்பின் உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என சுமார் எழுபது பேர் கலந்துகொண்டனர்.