சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் இந்திய சமூகத் தலைவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுக் கருத்தரங்கை இவ்வாண்டு சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி அன்று நடத்துகிறது.
2024ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவையொட்டி நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
‘ஆற்றலின் கருவறை – தமிழ் வகுப்பறை’ என்ற கருப்பொருளையொட்டி இந்தக் கருத்தரங்கு நடத்தப்படும்.
சமூக ஊடகப் படைப்பாக்கம் குறித்த தமிழாசிரியர்களின் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கிலும் இக்கூறுகளைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் பயன்முனைப்புமிக்க வகையில் பயன்படுத்தி பேச்சுத் தமிழை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தக் கருத்தரங்கிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி. ‘திரைமொழியின் வழி மாணவர் தமிழாற்றலை வளர்த்தல்’ என்ற தலைப்பையொட்டி அவர் உரையாற்றவுள்ளார்.
2007இல் வெளியான ‘கூடல் நகர்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான திரு சீனுராமசாமி, மூன்று தேசிய விருதுகளை வென்றவர். இயக்குனருக்கு அப்பாற்பட்டு, இவர் கவிஞர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களையும், கலாசாரச் சுவடுகளையும் அதற்குள் படிந்த விழுமியங்களையும் காட்சிகளில் வடிவமைக்கும் திரு சீனுராமசாமியின் உத்திமுறைகளைக் கற்றுக்கொள்ள ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.
காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்படும். அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் https://forms.gle/UFMuazCrzr42AAwk8 என்ற இணையத்தளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம்.