பிரதமர் லீ சியன் லூங்கின் பதவிக் காலத்தில் தங்களுக்கு ஆதரவு இருந்துள்ளதைக் காவல்துறை அதிகாரிகள் எப்போதும் உணர்ந்துள்ளனர் என்று காவ்லதுறை துணை ஆணையர் ஹாவ் குவாங் ஹுவீ கூறியுள்ளார்.
பிரதமர் லீயைக் கௌரவிக்க மூத்த காவல்துறை அதிகாரிகளின் ஓய்வகத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
பிரதமர் லீ, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் மே 15ஆம் தேதி பிரதமர் பொறுப்பை ஒப்படைப்பார்.
பதவியை ஒப்படைக்கப் போவதாக திங்கட்கிழமை (ஏப்ரல் 15) அறிவிப்பு வெளியானதற்குப் பிறகு முதல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் லீ, சிங்கப்பூர் காவல்துறையால் வழங்கப்படும் ஆக உயரிய விருதான தெமாசெக் வாளைக் காவல்துறை ஆணையர் ஹூங் வீ டெக்கிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் உட்பட 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். திங்கட்கிழமை வெளியான அறிவிப்புக்கு முன்னரே இந்த நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டதாக திரு சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.
பதவிக் காலத்தில் காவல்துறைக்குப் பிரதமர் லீ இடைவிடாத ஆதரவு அளித்ததாகக் காவல்துறை துணை ஆணையர் ஹாவ் சொன்னார்.
“சிங்கப்பூரில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் குற்றச்செயல்களுக்கு எதிரான போராட்டத்திலும் பிரதமர் லீயின் ஆதரவு தங்களுக்கு இருந்துள்ளதை நீல நிறச் சீருடை அணிந்த ஆடவர்களும் மாதர்களும் எப்போதும் அறிந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
2014ல் மூத்த காவல்துறை அதிகாரிகளின் இதே ஓய்வகத்தில் பிரதமர் லீக்கு விருந்தளித்து அவருக்குத் தெமாசெக் வாளை காவல்துறை வழங்கியது.
காவல்துறை எப்போதும் நிராகரிக்கக்கூடாத இரு அம்சங்கள் குறித்து பிரதமர் லீ அப்போது கூறியிருந்ததை காவல்துறை துணை ஆணையர் ஹாவ் சுட்டினார்.
முதலாவது, முதலாவதாக, நேர்மை, அர்ப்பணிப்பு, தொழில்முறை ஆகியவற்றின் உயர்ந்த தரங்களைப் பேணுவது. இதனால் காவல்துறை மீதான பொதுமக்களின் வலுவான நம்பிக்கை நிலைநிறுத்தப்படும்.
இரண்டாவது, தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்வது. இதனால் ஆக அண்மைய அச்சுறுத்தல்களைப் பற்றி அறிந்திருக்கவும் அவற்றைத் திறம்பட கையாளவும் காவல்துறையால் முடியும்.
பத்து ஆண்டுகளில், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது என்றும் தொழில்நுட்பத்திலும் காவல்துறை அதிக முதலீடு செய்து, புதிய ஆற்றல்களை உருவாக்கியுள்ளது என்றும் காவல்துறை துணை ஆணையர் ஹாவ் தெரிவித்தார்.
பிரதமர் லீ காவல்துறைக்கு உத்வேகம் அளித்திருப்பது நல்ல காலத்தில் மட்டுமன்று என்று அவர் கூறினார்.
“2013ல் லிட்டில் இந்தியா கலவரத்துக்குப் பிறகு கிறிஸ்துமஸுக்கு முதல் நாளிலும் 2019ல் அண்டை நாடுடன் ஏற்பட்ட சவால்மிக்க காலகட்டத்தின்போது சீனப் புத்தாண்டிற்கு முதல் நாளிலும் காவல்துறைக்குப் பிரதமர் லீ வருகை தந்தது, எங்களுக்கு மனவுறுதி அளிப்பதாக அமைந்தது,” என்று காவல்துறை துணை ஆணையர் ஹாவ் நினைவுகூர்ந்தார்.
காவல்துறைக்கும் ஒட்டுமொத்தமாக உள்துறைக் குழுவுக்கும் பிரதமர் லீ பேராதரவு அளித்துள்ளதாக திரு சண்முகம் கூறினார். மக்கள் பாதுகாப்பான, சிறந்த சூழலில் வசிப்பதை உறுதிசெய்வதற்கான முக்கியத்துவத்தில் பிரதமர் லீ எப்போதும் தெளிவாக இருந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.