ஸ்பெயினில் காணாமற்போன 39 வயது சிங்கப்பூர் மாதின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆட்ரி ஃபாங் டிரூ என்ற அந்த மாதின் உடலில் 30க்கும் அதிகமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதாக ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்தன. கூரான ஆயதத்தால் அவர் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக மர்சியா வட்டாரப் பாதுகாப்பு அமைப்பின் செய்தியாளர் அலுவலகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
இதன் தொடர்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவாட்டி ஃபாங்கின் உடல் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக ஆலிவ் ஊடகம் குறிப்பட்டது. அந்த ஹோட்டலில்தான் அவர் கடைசியாக உயிருடன் காணப்பட்டதாகவும் அது கூறியது.
திருவாட்டி ஃபாங்கின் உடல், சென்ற வார புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) மர்சியா வட்டாரத்தின் அபனில்லா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) அலிக்கான்டே வட்டாரத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ஃபாங் இம்மாதம் நான்காம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினுக்குப் புறப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடைசியாக ஏப்ரல் ஒன்பதாம் தேதி இரவு 8.45 மணிக்கு சாபியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருவாட்டி ஃபாங் காணப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியில் இது தெரியவந்தது.
ஏப்ரல் 10ஆம் தேதிவரை அவர் ஹோட்டலில் தங்கப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. திருவாட்டி ஃபாங்கின் குடும்பம் சிங்கப்பூர் நேரப்படி அன்றைய தினம்தான் அவரைக் கடைசியாகத் தொடர்புகொண்டது.
அன்றே அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், உடல் அடையாளம் காணப்படவில்லை.
சென்ற வார வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 11) குடும்பத்தாரால் திருவாட்டி ஃபாங்கைத் தொடர்புகொள்ள முடியவில்லை. குடும்பத்தார் இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிடம் தெரியப்படுத்தினர்.
திருவாட்டி ஃபாங்கை அழைத்துவர ஏப்ரல் 12ஆம் தேதியன்று அவரின் சகோதரர் சாங்கி விமான நிலையத்துக்குச் சென்றார். ஆனால் திருவாட்டி ஃபாங் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
ஏப்ரல் 16ஆம் தேதியன்று சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டார். ஏப்ரல் 10ஆம் தேதியன்று கண்டெடுக்கப்பட்ட உடல் திருவாட்டி ஃபாங்குடையது என்று மறுநாள் தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 18) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டபோது திருவாட்டி ஃபாங்கின் குடும்ப நண்பர் ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.