அழையா விருந்தாளிகள் செய்யும் சேட்டையால் புக்கிட் தீமாவிலுள்ள ‘பைன் குரோவ்’ கூட்டுரிமை வீட்டுக் குடியிருப்பாளர்களுக்குத் தினமும் தலைவலி.
குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. பிறகு, வெளியேறுவதற்குமுன் சேதம் பல செய்துவிடுகின்றன.
ஒருசில நேரங்களில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே நேரத்தில் வந்து அடாவடித்தனம் செய்கின்றன.
உடைந்த முட்டைகள், நொறுங்கிய ஜாடிகள், பாதி சாப்பிட்ட பழங்கள் என எங்கும் அலங்கோலமாக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றன.
குடியிருப்பாளர்கள் தங்களின் வீட்டுக் கதவுச் சன்னல்களை எந்நேரமும் திறந்துவைப்பதைத் தவிர்க்க முயன்றாலும் வெப்பகாலத்தில் அவ்வாறு செய்வது சாத்தியப்படாது என்கின்றனர்.
இதற்கிடையே, இல்லப் பணிப்பெண்கள் பலர் கூட்டாக இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள இறங்கியுள்ளனர்.
குரங்குகளைப் பார்த்துவிட்டால் உரத்த குரலில் கத்துவதும் சட்டிப் பானைகளை அடித்துப் பெரும் ஓசை எழுப்புவதுமாக அவர்கள் ஒருவரையொருவர் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
குரங்குகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, குரங்குகளுக்கு உணவு தரவேண்டாம் என்று தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.
அருகிலுள்ள காடுகளை அழித்ததால் அங்கிருந்த குரங்குகள் தங்கள் வீடுகளை நாடி வருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.