புத்தாண்டு தினத்தன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் 18 வயது இளையர் ஒருவரை பெயர் குறிப்பிடப்படாத கருவி கொண்டு தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆதாம் ஹம்பலி செட்டொனுக்கு $20,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டது.
30 வயதான ஆதாம் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு வியாழக்கிழமை ( ஜனவரி, 11ஆம் தேதி) முன்னிலையானதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
ஆதாம் மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
ஆர்ச்சர்ட் சென்ட்ரலின் 11வது மாடியில் ‘ஆர்க்11‘ என்ற டான்ஸ் கிளப் அருகே அதிகாலை 4 மணியளவில் திரு கார்மெலோ ஜோசுவா எமிலியோ எஸ்மண்ட் டி சில்வாவை ஆயுதம் கொண்டு தாக்கி வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக ஆதாம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குத்துவதற்கு அல்லது வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பெயர் குறிப்பிடப்படாத கருவியைத் தாக்குதலுக்கு ஆதாம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்த விவரங்கள் வியாழக்கிழமை நடந்த விசாரணையில் தெரிவிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தாக்குதலுக்குள்ளான அறுவரும் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் கூறப்பட்டது.
சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அறுவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக சொல்லப்பட்டது.
முன்னதாக, பிணை வழங்குவதற்குமுன் அரசு தரப்பு வழக்கறிஞர் பல பிணை நிபந்தனைகளைப் பட்டியலிட்டார்.
மின் ஒட்டுவில்லை அணிந்திருக்க வேண்டும், விசாரணை அதிகாரியுடன் தொடர்பில் இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவரை நேரடியாகவோ வேறு வழிகளிலோ தொடர்புகொள்ளக் கூடாது ஆகியவை அதில் அடங்கும்.
ஆதாமின் மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணைகள் முடிவடையும் வரை இவ்வழக்கை ஒத்திவைக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
இவ்வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.