மேம்பாலங்களைப் பாதுகாப்பான, செயல்திறன்மிக்க முறையில் சோதனையிடுவதற்கு சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தை (எஸ்யுடிடி) சேர்ந்த பொறியியல் பேராசிரியர் ஒருவரும் பட்டப்படிப்பை முடித்த இரண்டு மாணவர்களும் சிறப்பு ஆளில்லா வானூர்தியை உருவாக்கியுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு, இணைப் பேராசிரியர் ஃபூங் ஷாவ்ஹுவி, 42, நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது அது பற்றிய யோசனையை முன்வைத்தார்.
மேம்பாலங்களைச் சோதனையிடுவதில் உள்ள சிரமங்களைப் பற்றி அந்த அதிகாரிகள் அவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தனர்.
அதன்பிறகு ஆளில்லா வானூர்திக் கட்டமைப்பை உருவாக்க, திரு லியூ ஜிங்மின், 28, திரு டென்ஸல் லீ, 30, என்ற அந்த இரண்டு மாணவர்களுடன் இணைப் பேராசிரியர் ஃபூங் ஒன்றிணைந்து செயல்பட்டார்.
ஒரு மூலமாதிரியை உருவாக்க அவர்களுக்கு ஓராண்டுகாலம் தேவைப்பட்டது. அதனைச் செம்மைப்படுத்துவதற்கு அவர்களுக்கு மூவாண்டுகளாயின.
செயற்கை நுண்ணறிவில் இயங்கும் அந்தக் கட்டமைப்பு முழுமையாகத் தானியக்க முறையில் செயல்படும். அதனால், மேம்பாலச் சோதனையை ஒருவர் மட்டுமே ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் மேற்கொள்ளலாம்.
இதற்கு முன்னர், மேம்பாலச் சோதனையை மேற்கொள்ள பல ஊழியர்களின் ஈடுபாடு தேவைப்பட்டது. அதோடு, அதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தேவை என்றும் கூறப்பட்டது.