துவாஸ் நீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்திருப்பதால், திட்டமிட்டபடி 2026 முதல் சிங்கப்பூருக்கு அதிக மறுபயனீட்டு நீர் கிடைக்கவிருக்கிறது.
இந்த ஆலை, ஒரு நாளில் 650,000 கனமீட்டர் வீட்டுக் கழிவுநீரையும், தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்ட 150,000 கனமீட்டர் நீரையும் சுத்திகரிக்கவல்லது.
ஏற்கெனவே சாங்கியிலும் கிராஞ்சியிலும் செயல்பட்டு வரும் நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளுடன் சேர்ந்து, 2026 முதல் சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் மொத்தம் 1.97 மில்லியன் கனமீட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும்.
சிங்கப்பூரில் தற்போது ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 1.95 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. எதிர்வரும் 2065ஆம் ஆண்டுக்குள் இது இருமடங்கு வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துவாஸ் ஆலையில், வீடுகளின் கழிவுநீரில் 85 விழுக்காடு வரை நியூவாட்டராக மாற்ற முடியும்.
ஆனால்,நீர், கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆகியவற்றுடன் நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்த அதிக செலவாகிறது.
தண்ணீர் விலை ஆகக் கடைசியாக 2017ல் 30 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, நீர்ச் சுத்திகரிப்பு, விநியோகச் செலவுகள் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகரித்துள்ளன. மின்சாரக் கட்டணங்களும் அதிகரித்திருப்பதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
இதனால், கட்டுமானச் செலவு 35 விழுக்காடும், நீர்ச் சுத்திகரிப்புக்கான வேதிப்பொருள் செலவு 33 விழுக்காடும், மனிதவள, பராமரிப்புச் செலவுகள் 18 விழுக்காடும் கூடியிருப்பதாகக் கழகம் கூறியது.
நிலத்தடியில் சுரங்கக் குழாய்க் கட்டமைப்பை அமைக்கும் செலவும் முதற்கட்டப் பணியின் $3.4 பில்லியனிலிருந்து இரண்டாம் கட்டப் பணிக்கு $6.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.
ஐம்பது ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையை வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குச் சுற்றிக்காட்டிய கழகம், விலை நெருக்குதல்களைக் குறைக்க பல்வேறு தீர்வுகளைச் செயல்படுத்தி இருப்பதாக விளக்கியது.
ஆலைக்குத் தேவைப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி, அருகிலுள்ள ஒருங்கிணைந்த குப்பை நிர்வாக ஆலையிலிருந்து கிடைக்கும். இந்த ஆலை, பயன்படுத்தப்பட்ட நீரிலுள்ள கசடுகளையும் உணவுக்கழிவையும் பயன்படுத்தி உயிர்வாயுவை உற்பத்தி செய்யும்.
நீர்ச் சுத்திகரிப்பு ஆலையின் கூரையில் பதிக்கப்பட்ட சூரியவொளித் தகடுகளிலிருந்து ஒன்று முதல் இரண்டு விழுக்காடு மின்சாரம் கிடைக்கும்.
காற்றோட்ட, பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க, 40 மீட்டர் உயரமான கசடு செரிமானத் தொட்டிகள் தரைக்குமேல் கட்டப்படுகின்றன. இவை வழக்கமாக நிலத்தடியில் கட்டப்படுபவை.