ஹாங்ஜோ: அண்மையில் ஆண்களுக்கான ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 50 ஓட்டங்களுக்குச் சுருட்டியிருந்தது இந்திய அணி.
இந்நிலையில், ஆண்களுக்குத் தாங்களும் சளைத்தவர்களல்லர் என மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர் இந்திய மகளிரணியினர்.
சீனாவின் ஹாங்ஜோவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த முதலாவது அரையிறுதியில் இந்திய மகளிரணி, பங்ளாதேஷ் அணியை 17.5 ஓவர்களில் 51 ஓட்டங்களுக்கு மூட்டைகட்ட வைத்தது.
இந்த டி20 போட்டியில், பங்ளாதேஷ் தரப்பில் ஒருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினார். இந்திய அணித் தரப்பில் பூஜா வஸ்த்ராக்கர் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அடுத்து பந்தடித்த இந்திய அணி, 8.2 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இறுதிப்போட்டி திங்கட்கிழமை நடைபெறும்.