புதுடெல்லி: கணுக்கால் காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹார்திக் பாண்டியா உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
அவருக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்ற மாதம் 19ஆம் தேதி பங்ளாதேஷிற்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார் பாண்டியா. அவருக்குத் தசைநார்ச் சிதைவு ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்திய அணிக்காக 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார் பிரசித். கடைசியாக செப்டம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதுவரை ஆடிய ஏழு போட்டிகளிலும் வென்று, இந்திய அணி உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
கோல்கத்தாவில் நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது.