ஆஸ்திரேலியாவில் காற்பந்து ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற நடுவர் மீது கோபம் கொண்டு அவரைத் தாக்கியுள்ளார் போட்டியைக் காணச் சென்ற ரசிகர் ஒருவர்.
ஆடவர் தாக்கியதால் நடுவரின் தாடை உடைந்தது, சில பற்களும் உடைந்தன.
சம்பவம் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) நடந்தது.
தாக்குதலுக்கு உள்ளான நடுவரின் பெயர் கோடர் யாகி. அவருக்கு 45 வயது.
நடுவர் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
நடுவரைத் தாக்கிய ஆடவருக்கு 25 வயது என்றும் அவர் தற்காலிகத் தடையில் இருக்கும் காற்பந்து வீரர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
ஆடவர் ஏப்ரல் 30ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள யாகி, “ என்னை யாரும் நடுவர் பணியில் இருந்து தடுக்கமுடியாது” என்று கூறியுள்ளார்.