இங்கிலாந்தின் ஓவல் விளையாட்டரங்கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதியாட்டம் நடந்து வருகிறது.
அதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிவருகின்றன.
ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (ஜுன் 9) வேடிக்கையானதொரு சம்பவம் நடந்தது.
இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தடிக்கத் தொடங்கினர். பந்தடிக்க சிறந்த நேரமாக அது இருந்ததால் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் வெகு நேரம் பந்தடிப்பார்கள் என்று கணக்கிட்டு சற்று நேரம் தூங்கியுள்ளார் மூன்றாவதாக விளையாடவரும் மார்னஸ் லபுஷேன்.
ஆனால், தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3.3 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
நாற்காலியில் தூங்கியபடி இருந்த லபுஷேன், வார்னர் ஆட்டமிழந்தவுடன் விளையாட்டரங்கில் ரசிகர்கள் ஏற்படுத்திய சத்தத்தால் திடீரென எழுந்தார்.
அதன் பின்னர் தூக்கக் கலக்கத்திலேயே பந்தடிக்க ஆடுகளத்திற்குச் சென்றார். அந்த காட்சி நேரலையின்போதும் காட்டப்பட்டது.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
அந்தக் காணொளி சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 12.5 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அந்த அணி தற்போது 296 ஓட்டங்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.