ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லேங்கர், ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மன் கவாஜா முழுக்கை மேல் அங்கி அணிந்ததால்தான் ஆட்டமிழந்ததாக கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் மோதி வருகின்றன.
ஆட்டம் இங்கிலாந்தின் ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் 7ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.
ஆட்டத்தின் முதல் நாளில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க நிலை ஆட்டக்காரராக கவாஜா களமிறங்கினார்.
கவாஜா நான்காவது ஓவரில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் முகமது சிராஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
“ குளிருக்காக கவாஜா முழுக்கை மேல் அங்கி அணிந்துள்ளார். ஆனால் அது அவரது ஆட்டத்தைப் பாதித்துள்ளது. முழுக்கை மேல் அங்கி அணிந்தால் முதல் ஒரு மணி நேரம் கவனமாக விளையாட வேண்டும், ஆனால் அவர் அதை செய்யாததால் ஆட்டமிழந்தார்’’ என்றார் ஜஸ்டின் லேங்கர்.
முதல் நாளில் மற்ற பந்தடிப்பாளர்கள் ஓட்டங்கள் குவித்தனர். கட்டாயம் கவாஜா ஏமாற்றம் அடைந்திருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ஓட்டங்கள் குவித்தது. இந்தியா இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.