இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வென்றபோதும், அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவ்வணி தோற்றுப்போனது.
இதனையடுத்து, பாகிஸ்தான் அணி வீரர்களுக்குள் மோதல் எழுந்துள்ளதாகவும் இருவர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டுச் செய்தியாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக திங்கட்கிழமை நடக்கும் போட்டிக்குப் பிறகு கூடுதல் விவரம் தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அணித்தலைவர் பாபர் ஆசமுக்குச் சில வீரர்கள் ஆதரவளிப்பதில்லை என்றும் அப்பதிவுகள் கூறின.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு விளக்கமளித்துள்ளது.
“உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை.
“அணி வீரர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு எந்தச் சான்றும் இல்லை.
“இத்தகைய பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதால் வாரியம் வருத்தமடைந்துள்ளது. ஊடகங்கள் பத்திரிகை அறத்துடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.