புதுடெல்லி: உலகக் கிண்ணச் சதுரங்கப் போட்டியில் நூலிழையில் கிண்ணத்தைத் தவறவிட்ட இளம் இந்திய வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை என்ணிப் பெருமிதம் கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு அண்மையில் அஸர்பைஜானில் நடத்திய உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார் பிரக்ஞானந்தா.
இறுதிச் சுற்றின் முதலிரு ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘டைபிரேக்கர்’ முறை கையாளப்பட்டது. இடையில் ஒரு நகர்த்தலில் பிரக்ஞானந்தா சறுக்க, பின்னர் எழுச்சியுடன் ஆடி வென்றார் கார்ல்சன்.
இந்நிலையில், “உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட பிரக்ஞானந்தா குறித்துப் பெருமிதம் அடைகிறோம். இறுதிப்போட்டியில் வலுவான வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் கடுமையாகப் போராடினார். இது சிறிய சாதனையன்று. வரவிருக்கும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகள்,” என்று மோடி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.