புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது.
முதலில் பந்தடித்த கோல்கத்தா 20 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ஓட்டங்களும் ஆந்த்ரே ரசல் 38 ஓட்டங்களும் எடுத்தனர்.
டெல்லியின் தரப்பில் இஷாந்த் சர்மா, நோர்க்கியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து பந்தாடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித் தலைவர் டேவிட் வார்னர் 57 ஓட்டங்கள் எடுத்தார். ஆறாவது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும். கோல்கத்தா நான்காவது முறையாகத் தோல்வியின் பிடியில் சிக்கியது.
“இரண்டு புள்ளிகளைப் பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளோம். எங்களின் பந்துவீச்சு வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப் படுகிறோம்.
“பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அதைச் சரியாக செய்தோம்.
“நாங்கள் பந்தடிப்பில் மீண்டும் விக்கெட்டுகளை இழந்தோம். இருப்பினும், ஒருவருக்கொருவர் நாங்கள் ஆதரவாக இருந்தோம். மேம்படுத்த வேண்டிய பகுதிகள் குறித்து கலந்துரையாடினோம். நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம்,” என்று டெல்லி அணியின் தலைவர் டேவிட் வார்னர் கூறினார்.
“நாங்கள் 15 முதல் 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆடுகளம் எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நான் அதிக நேரம் பந்தடித்திருக்க வேண்டும்.
“குறைந்த ஓட்ட எண்ணிக்கையைத் தற்காக்கப் போராடினோம்,” என்று கோல்கத்தா அணித் தலைவர் நிதீஷ் ரானா கூறினார்.