லண்டன்: இங்கிலாந்தின் எஃப் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட்டும் மான்செஸ்டர் சிட்டியும் மோதவிருக்கின்றன.
போட்டியின் வரலாற்றில் இறுதியாட்டத்தில் இவ்விரு குழுக்களும் மோதுவது இதுவே முதல்முறை.
பிரைட்டனும் யுனைடெட்டும் மோதிய அரையிறுதியாட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.
பெனால்டிகளைக் கொண்டு வெற்றியாளர் முடிவுசெய்யப்பட்டது.
பெனால்டிகளில் 7-6 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது யுனைடெட்.
முன்னதாக நடைபெற்ற மற்றோர் அரையிறுதியாட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது சிட்டி.
இங்கிலாந்து காற்பந்து வரலாற்றில் இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் ஆகிய மூன்றையும் ஒரு பருவத்தில் வென்ற ஒரே குழு என்ற பெருமை யுனைடெட்டுக்கு உள்ளது.
இந்தப் பருவத்தில் அந்தச் சாதனையை ஈடுகட்டும் வாய்ப்பு அபாரமாக விளையாடிவரும் சிட்டிக்கு உள்ளது.
எஃப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் கூடுமானவரை அதைத் தடுக்கத் தனது குழு பாடுபடும் என்றார் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக்.