மட்ரிட்: மான்செஸ்டர் சிட்டிக்கும் ரியால் மட்ரிட் அணிக்கும் இடையிலான சாம்பியன்ஸ் லீக் காற்பந்து அரை இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. முதல் பாதி ஆட்டத்தில் 36வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் போட்டு ரியால் மட்ரிட்டை முன்னேற்றினார்.
அதேநேரம் அந்த அணி வீரர்கள் தற்காப்பைத் தீவிரமாகத் தொடர்ந்தனர். சிட்டியின் கோல் போடும் முயற்சிகளைத் தடுப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.
அந்த வகையில் சிட்டியின் கோல் மன்னன் என்று புகழப்படும் எர்லிங் ஹாலண்ட் அருமையாகக் கொண்டு சென்ற பந்தை கோலாக மாற்ற முயன்றபோது ரியால் வீரர்கள் விவேகத்துடன் செயல்பட்டு அதனைத் தடுத்தனர்.
இருப்பினும், எதிரணியை முன்னேறவிடக் கூடாது என்னும் அவர்களின் நினைவு கனவாகிப்போனது.
இடைவேளைக்குப் பின்னர் 67 வது நிமிடத்தில் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரர் கெவின் டி பிரய்ன கோல் அடித்து சமப்படுத்தினார்.
“சரியான நேரத்தில் போடப்பட்ட கோல் அது,” என்று சிட்டி நிர்வாகி கார்டியாலோ புகழ்ந்தார்.
மேலும் அவர் கூறுகையில், “எதிரணியின் தவறுகள் எங்களுக்குத் தெரியும். அதனை அவர்கள் இனிமேல் சரிசெய்யலாம். அப்படியே தொடர்ந்தாலும் தொடரலாம். இருப்பினும் எங்கள் தரப்பில் இன்னும் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும்,” என்றார்.