ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் முதல் குழு குஜராத்
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கக் கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் குழுவாக குஜராத் டைட்டன்ஸ் விளங்குகிறது.
13 ஆட்டங்களில் 18 புள்ளிகளைக் குவித்துள்ளது குஜராத்.
நேற்று முன்தினம் இரவு அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சும் ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. முதலில் பந்தடித்த குஜராத்
20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு
188 ஓட்டங்களைக் குவித்தது.
தொடக்க ஆட்டகாரர் ஷுப்மன் கில் 58 பந்துகளில் 101 ஓட்டங்களை எடுத்தார். ஐதராபாத்தின் புவனேஷ் குமார் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலக்கை விரட்டிய ஐதராபாத்தக்கு முகம்மது ஷமி, மோகித் சர்மா முட்டுக்கட்டையாக இருந்தனர். அவ்விரு பந்துவீச்சாளர்களும் ஆளுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்தினர்.
இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பிளேஆஃப் சுற்றுக்கான மற்ற மூன்று இடங்களைப் பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ, பஞ்சாப், பெங்களூரு ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சிங்கப்பூர் வரும் ரொனால்டோ
சிங்கப்பூர்: அடுத்த மாதம் சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ளார் போர்ச்சுகல் காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்). ரொனால்டோவை நேரில் காண இங்குள்ள ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதற்கு முன்பு பலமுறை சிங்கப்பூருக்கு வந்துள்ள ரொனால்டோ அடுத்த மாதம் நடுப்பகுதியில் மீண்டும் வருகை தருவார். சிங்கப்பூர் ஒலிம்பிக் அறநிறுவன-பீட்டர் லிம் உபகாரச் சம்பளத்தைப் பெறுவோருக்கு ஆதரவு வழங்க 38 வயது ரொனால்டோ பயணம் மேற்கொள்கிறார்.
இந்த உபகாரச் சம்பளத் திட்டம் 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் வர்த்தகரான பீட்டர் லிம் நன்கொடையாக வழங்கிய 10 மில்லியன் வெள்ளியைக் கொண்டு சிங்கப்பூர் ஒலிம்பிக் அறநிறுவனம் திட்டத்தைத் தொடங்கியது.
ரொனால்டோவும் திரு லிம்மும் நண்பர்கள். திரு லிம், ஸ்பானிய காற்பந்து லீக் குழுவான வெலன்சியாவின் உரிமையாளரும் ஆவார். ரொனால்டோ, தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் குழுவில் விளையாடி வருகிறார்.