நோம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பெண்கள் ‘எப்பி’ பிரிவு வாள் வீச்சில் சிங்கப்பூர் வீராங்கனைகள் தங்கம் வென்றுள்ளனர். எல்லி கோ, கிரியா டிக்கானா, ஃபில்ஸா ஹிடாயா, ரெபெக்கா ஓங் ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு இறுதிச் சுற்றில் 45-37 எனும் ஆட்டக்கணக்கில் பிலிப்பீன்சை வென்றது.
சென்ற வாரம் நடைபெற்ற ஆறு தனிநபர் வாள் வீச்சுப் போட்டிகளில் சிங்கப்பூர் ஐந்து தங்கப் பதக்கங்களைக் குவித்தது.
ஆண்கள் ‘சேபர்’ பிரிவில் மட்டும் சிங்கப்பூருக்குத் தங்கம் கிடைக்கவில்லை.
நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ‘ஃபாய்ல்’ பிரிவிலும் சிங்கப்பூர் வாகை சூடியது. ஆண்கள் ‘ஃபாய்ல்’ பிரிவின் இறுதியாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றது.
வாள் வீச்சுப் போட்டிகளில் மொத்தம் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது சிங்கப்பூர்.
பெண்கள் தரைப்பந்தில் சிங்கப்பூர் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளது. தாய்லாந்துக்கு எதிரான இறுதியாட்டத்தில் சிங்கப்பூர் 4-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெண்கள் தரைப்பந்தில் தங்கம் வென்றது சிங்கப்பூர். 2015, 2019ஆம் ஆண்டு விளையாட்டுகளிலும் அணி வாகை சூடியது.
2017, 2021 விளையாட்டுகளில் தரைப்பந்துப் போட்டிகள் இடம்பெறவில்லை.
இவ்வாண்டு விளையாட்டுகளின் ஆண்கள் தரைப்பந்துப் போட்டியில் மலேசியாவை வென்று, சிங்கப்பூர் வெண்கலப் பதக்கம் வென்றது.
பெண்கள் ஒற்றையர் மேசைப்பந்துப் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்றிருக்கிறார் சிங்கப்பூரின் ஸெங் ஜியான். இதற்கு முன்பு தென்கிழக்காசிய விளையாட்டுகளின் இப்போட்டியில் நான்கு முறை இறுதியாட்டத்திற்குச் சென்று தோல்வியைத் தழுவிய 26 வயது ஸெங், விடாமுயற்சியுடன் ஆடி வெற்றிவாகை சூடினார்.
இறுதியாட்டத்தில் தாய்லாந்தின் சுதாசினி சாவெட்டாபுட்டை 4-3 (11-8, 11-8, 11-9, 3-11, 9-11, 7-11, 11-9) எனும் ஆட்டக்கணக்கில் இவர் வெற்றிகண்டார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆண்கள் ஒற்றயைர் மேசைப்பந்திலும் முதல்முறையாகத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் மற்றொரு சிங்கப்பூரரான ஐஸெக் குவெக். இறுதியாட்டத்தில் வியட்னாமின் கையன் அன் துவை 4-0 (11-3, 11-6, 11-8, 11-7) எனும் ஆட்டக்கணக்கில் வென்றார் 16 வயது ஐஸெக் குவெக்.