மும்பை: அனைத்துலக கிரிக்கெட் மன்றம் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. அந்த 13வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியா ஏற்று நடத்துகிறது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்த அட்டவணைப்படி, அந்தப் போட்டி இந்தியாவின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும்.
தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என்று பேசப்படுகிறது.
அந்தப் போட்டி அகமதாபாத் விளையாட்டு அரங்கில் அக்டோபர் 15ஆம் தேதி நடக்கும் என்று அட்டவணை கூறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்.
ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கும்.
ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடும். கிரிக்கெட் உலகக்கிண்ண சூப்பர் லீக் மூலமாக எட்டு குழுக்கள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன.
இரண்டு குழுக்களைத் தீர்மானிக்கும் தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது ஸிம்பாப்வேயில் நடந்து வருகின்றன. அதில் இலங்கை, ஸிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பத்து அணிகள் இரு பிரிவுகளாகப் பொருதுகின்றன.