லண்டன்: செனகலைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரர் நிக்கலஸ் ஜேக்சனை வாங்கியுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான செல்சி. ஸ்பெயினின் விலாரியால் குழுவிலிருந்து செல்சியில் சேர்கிறார் ஜேக்சன்.
22 வயது ஜேக்சனை 32 மில்லியன் பவுண்ட் (55 மில்லியன் வெள்ளி) தொகைக்கு வாங்கியிருக்கிறது செல்சி.
இளம் வீரரான ஜேக்சன் பெரும் ஆற்றல் கொண்டவர் என்று செல்சியின் விளையாட்டு இயக்குநர்கள் பாராட்டிப் பேசினர். புதிய நிர்வாகி மொரிச்சியோ பொக்கட்டினோவுடன் ஜேக்சன் இணைந்து செயல்படத் தாங்கள் ஆவலாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சென்ற காற்பந்துப் பருவத்தில் 500 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமாகச் செலவு செய்து புதிய விளையாட்டாளர்களை வாங்கியது செல்சி. அதிகம் செலவு செய்துவிட்டதால் யூயேஃபா எனும் ஐரோப்பியக் காற்பந்துச் சங்கத்தின் நிதி சார்ந்த விதிமுறைகளின்படி செல்சி சில விளையாட்டாளர்களை விற்கவேண்டும்.
அந்த வகையில் தாக்குதல் வீரர் காய் ஹாவர்ட்ஸ் ஆர்சனலிடம் விற்கப்பட்டுள்ளார். எடுவார்ட் மெண்டி, கலிடூ குலிபாலி இருவரும் சவூதி அரேபிய குழுக்களில் சேர்ந்தனர்.
ரூபன் லாஃப்டஸ் சீக் வெள்ளிக்கிழமையன்று இத்தாலியின் ஏசி மிலான் குழுவில் சேர்ந்தார்.
சென்ற பிரிமியர் லீக் பருவத்தில் செல்சி பட்டியலில் 12வது இடத்தில் முடித்தது. 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு லீக் பருவத்தில் செல்சி இவ்வளவு மோசமாகச் செய்ததில்லை.
குழுவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லும் கட்டாயத்தில் இருக்கிறார் புதிய நிர்வாகி பொக்கட்டினோ.