சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பேங்காக்கில் நடந்துவரும் அப்போட்டிகளில், பந்தயத்தைச் சற்று மெதுவாகத் தொடங்கினாலும் இறுதியில் வேகம் கூட்டி, வெற்றியைத் தனதாக்கினார் 26 வயதான சாந்தி. 100 மீட்டரைக் கடக்க அவர் 11.20 நொடிகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் 0.06 நொடிகளில் தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார்.
இந்த வெற்றியின்மூலம் ஆசியத் திடல்தடப் போட்டிகளில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூருக்குப் பதக்கம் கிட்டியுள்ளது.
கடந்த மே மாதம் கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ., 200 மீ., என இரண்டிலும் சாந்தி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.