சென்னை: ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. சென்னையின் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் இந்தியா, ஜப்பானை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், மந்தீப் சிங், சுமித், கார்த்தி செல்வம் ஆகியோர் இந்தியாவின் கோல்களைப் போட்டனர்.
ஈராண்டுகளுக்கு முன்பு பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியின் அரையிறுதியாட்டத்தில் ஜப்பானிடம் தோல்விகண்டது இந்தியா. இம்முறை அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகள் அறவே இல்லை.
மற்றோர் அரையிறுதியாட்டத்திலும் கோல் மழை பொழிந்தது. தென்கொரியாவை 6-2 எனும் கோல் கணக்கில் வென்று இறுதியாட்டத்துக்கு முன்னேறியது மலேசியா.