ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அங்குள்ள லோட்டஸ் திடலில் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
இந்நிலையில் இந்திய விளையாட்டு வீரர்கள் 3 வெள்ளி, 2 வெண்கலம் உள்ளிட்ட 5 பதக்கங்களை வென்றனர்.
மகளிருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆஷி சவுக்ஷி, மெகுலி கோஷ் ரமிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தனர் வீராங்கனைகள்.
ஆண்களுக்கான லகு ரகு டவுல்ஸ் ஸ்கல்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான இரண்டு பேர் செலுத்தும் துடுப்புப் படகுப் போட்டியில் வெண்கலமும் 8 பேர் கொண்ட போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.
2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 655 பேர் பங்கேற்கின்றனர்.
தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா 8-வது நாடாக வலம் வந்தது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைய்ன் ஆகியோர் இணைந்து தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.\
.