ஹாங்ஜோ: சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுகளின் குறிசுடுதல் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது.
10 மீட்டர் குறிசுடுதல் போட்டியில் இந்தியாவின் சராப்ஜோட் சிங், அர்ஜுன் சிங் சீமா, சிவா நர்வால் இணைந்து வியாழக்கிழமை தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
மூன்று வீரர்களும் இணைந்து 1,734 புள்ளிகள் எடுத்தனர். 10 புள்ளிகள் கொண்ட வளையத்தில் மட்டும் 50 முறை சுட்டது அந்த வெற்றிக்கூட்டணி.
சராப்ஜோட் சிங் 580 புள்ளிகள், அர்ஜுன் சிங் சீமா 578 புள்ளிகள், சிவா நர்வால் 578 புள்ளிகள் எடுத்தனர்.
இரண்டாவது இடத்தில் சீனாவும் (1,733 புள்ளிகள்) மூன்றாவது இடத்தில் வியட்னாமும் (1,730 புள்ளிகள்) வந்தன.
புதன்கிழமை மட்டும் குறிசுடுதல் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது.
வியாழக்கிழமை மதிய நிலவரப்படி இந்தியா குறிசுடுதலில் மட்டும் நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
குழுவில் சிறப்பாக விளையாடினாலும் தனிநபர் குறிசுடுதல் போட்டியில் சராப்ஜோட் சிங், அர்ஜுன் சிங் சீமா சோபிக்கவில்லை.
சராப்ஜோட் சிங் நான்காவது இடத்திலும் அர்ஜுன் சிங் சீமா எட்டாவது இடத்திலும் முடித்தனர்.
வெண்கலம் வெல்லும் வாய்ப்பை சராப்ஜோட் சிங் இறுதிக்கட்டத்தில் தவறவிட்டார்.
குழு விளையாட்டில் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி தருகிறது இருப்பினும் தனிநபர் குறிசுடுதலில் பதக்கம் வெல்லத் தவறியது வருத்தம் தருகிறது. சிறுசிறு தவறுகள் பதக்கம் வெல்ல தடையாக இருந்தது என்றார் சராப்ஜோட் சிங்.
வரும் நாள்களில் சிறப்பாக விளையாடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதே அடுத்த இலக்கு என்று சராப்ஜோட் சிங் கூறினார்.