ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நடப்பு வெற்றியாளர் ஜப்பபானைத் திக்குமுக்காட வைத்தது இந்தியா. எனினும், இந்த ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் இந்திய அணி சற்று மெத்தனமாகவும் இருந்தது.
இந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. அபிஷேக் (2), மந்தீப் சிங், அமித் ரோஹிதாஸ் ஆகியோர் இந்தியாவின் கோல்களைப் போட்டனர்.
இந்தியா, ஜப்பானை ஊதித் தள்ளும் நிலையில் இருந்தது.
எனினும், ஆட்டத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் ஜப்பான் இரண்டு கோல்களைப் போட்டு கோல் எண்ணிக்கையைப் பாதியாக்கியது. இறுதி கோல் எண்ணிக்கையான 4-2 இந்தியாவின் வெற்றியை சற்று சாதாரணமாகத் தெரிய வைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஏ’ பிரிவில் இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. அடுத்ததாக சனிக்கிழமையன்று பரம வைரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.
ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த ஆட்டத்தை வெல்லும் அணி ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை வகிக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் முடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.