ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
1974ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்கான முதல் தடகளப் பதக்கத்தை சாந்தி, 27, வென்றிருக்கிறார். 11.27 வினாடிகளில் கோட்டைக் கடந்த சாந்தி, வெற்றியாளரான சீனாவின் ஜி மான்கியைவிட வெறும் 0.04 வினாடிகள் பின்தங்கியிருந்தார். பஹ்ரேனின் ஹஜாத் அல்கால்டி 11.35 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஜூலையில் நடந்த ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் வெற்றிபெற்ற சாந்தி, தகுதிச்சுற்றின்போது 11.42 வினாடிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சீனாவின் ஜீ, தகுதிச்சுற்றின்போது 11.17 வினாடிகளில் முதலிடம் பிடித்திருந்தார். ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் இரண்டு தங்கங்களுக்கும் மேலாக, மே மாதம் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாந்தி சாதனை படைத்திருந்தார். ஆகஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டியில் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தின் தகுதிச்சுற்றில் 22.57 வினாடிகளில் கடந்து, ஒலிம்பிக் தகுதிச் சாதனையை முறியடித்து அரையிறுதிக்கு வந்த முதல் சிங்கப்பூர் வீரராங்கனை சாந்தி. இப்போது சாந்தி வென்றுள்ள வெள்ளிப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் 19வது பதக்கமாகும். கடைசியாக 1974ல் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. அடுத்ததாக, ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் தகுதிச்சுற்றுடன் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாந்தி பங்கேற்கிறார்.