புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் சனிக்கிழமையன்று இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
சவால்மிக்க சூழலில் இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிக் நோர்ட்யே, சிசாண்டா மகாலா இருவரும் இலங்கைக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் இடம்பெறமாட்டார்கள். நோர்ட்யேக்குப் பதிலாக ககிசோ ரபாடா, ஜெரால்ட் கொவெட்ஸி ஆகியோரை தென்னாப்பிரிக்கா சார்ந்திருக்கும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் கூறப்படுகிறது.
ககிசோ ரபாடாவின் அனுபவமும் 23 வயது ஜெரால்ட் கொவெட்ஸீயின் துடிப்பும் தென்னாப்பிரிக்காவுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
டேவிட் மில்லரும் அணித் தலைவர் தெம்பா பாவ்மாவும் சிறப்பாக ஆடி வந்துள்ளனர். அவர்களுக்கும், பந்தடிப்பாளரும் விக்கெட் கீப்பருமான குவின்டன் டி கொக்குக்கும் இடையே உள்ள நல்ல புரிந்துணர்வு இலங்கைக்கு சவாலாக அமையலாம்.
தரமான பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் திறமைவாய்ந்த ஹைன்ரிக் கிளாசன், தென்னாப்பிரிக்கா முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
டிமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, பத்தும் நிசாங்கா, சதீரா சமரவிக்ரம போன்ற தரமான பந்தடிப்பாளர்களைக் கொண்டுள்ளது இலங்கை. எனினும், தொடக்கப் பந்தடிப்பாளர் பத்தும் நிசாங்கா, அணித் தலைவர் தசுன் ஷனக்கா இருவரும் அண்மைக் காலமாக அவ்வளவு சரியாக விளையாடாதது அணிக்குக் கவலை தரும் ஒன்று.
பல சவால்களை எதிர்கொண்டு இந்தியாவில் அரங்கேறும் இவ்வாண்டின் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் இலக்குடன் இருக்கின்றன இலங்கையும் தென்னாப்பிரிக்காவும்.
சனிக்கிழமையன்று நடைபெறும் மற்றோர் ஆட்டத்தில் பங்ளாதேஷும் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.