ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடந்துவரும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.
கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தைவானை 26-25 என்று வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. அது அந்நாட்டின் நூறாவது பதக்கமாக அமைந்தது.
சிறப்பாக செயல்பட்டு 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டாளர்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகம் வழி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“100 பதக்கங்களை வென்று இந்தியா சாதித்துள்ளது, இது இந்திய மக்களுக்கு பெரும் ஊக்கத்தை தந்துள்ளது,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியா இம்முறை 100 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளில் போட்டியைத் தொடங்கியது. அதை தற்போது விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் நிறைவேற்றியுள்ளனர் உள்ளனர் என்று ஆசிய விளையாட்டில் இந்தியாவை வழிநடத்தும் தலைமை அதிகாரி பூபேந்தர் சிங் பாஜ்வா தெரிவித்தார்.
ஐந்தாண்டுக்கு முன்னர் இந்தோனீசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 16 தங்கப்பதக்கம் உட்பட 70 பதக்கங்களை வென்று இந்தியா 8ஆவது இடத்தில் முடித்தது.
தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. உஸ்பெக்கிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைவதால் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜப்பானும் மூன்றாவது இடத்தில் தென்கொரியாவும் உள்ளது.