உலகளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டான கிரிக்கெட்டுக்கு சிங்கப்பூரிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், குடிபெயர்ந்து வாழும் இந்தியர்கள், இளையர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உலகக் கிண்ண ஆட்டங்களை ஆர்வத்துடனும் ஆவலுடனும் கண்டுகளித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டை சாதாரண விளையாட்டாக நினைத்தது இல்லை என்றும் அதனுடன் உணர்வுபூர்வமான உறவு இருக்கிறது என்றும் கூறினார் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் பணியாற்றிவரும் ராமலிங்கம் வடிவேல், 42.
கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனத்தில் தீயணைப்பு பாதுகாப்புப் பிரிவில் இயக்குநராக இருக்கும் திரு ராமலிங்கம், “இவ்வாண்டு உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறுவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் நடந்த பயிற்சி போட்டிகளையே மிகுந்த ஆர்வத்துடன் கண்டேன். இம்முறை இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது உறுதி,” என்று கூறினார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
“இதற்குமுன் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா வாகை சூடியது. இம்முறையும் வெற்றி இந்தியாவிற்குத்தான்,” என்று நம்பிக்கையுடன் சொன்னார், கட்டுமானத் துறையில் மூத்த ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் திரு முரளிதரன் லெட்சுமணன், 49.
கடந்த 26 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலைசெய்யும் இவர், பொங்கோல் பகுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதியில் வசிக்கிறார்.
“எங்கள் விடுதியில் இந்தியா, பங்ளாதேஷ், மியன்மார் நாடுகளைச் சார்ந்த பல ஊழியர்கள் உள்ளனர். அனைவரும் சேர்ந்து பெரிய திரைகட்டி ஆட்டங்களைக் கண்டால் ஊழியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரலாம் என்பதால் விடுதி நிர்வாகம் பல ஆண்டுகளாகவே அதற்கு அனுமதி வழங்குவதில்லை,” என்று வருத்தத்துடன் கூறினார் திரு முரளி.
இந்தியா ஆடும் போட்டிகளை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கத் திட்டமிட்டுள்ளார், கட்டுமானத் துறையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு ராம்குமார் செல்லையா, 43.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வெளிநாடுகளுக்கும் சென்று விளையாடி வருகிறார்.
தன்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட் விளையாட்டை எப்படித் தனியாக விளையாட முடியாதோ அதேபோல் தனியாகப் பார்க்கவும் முடியாது என்றும் அது சுவாரசியமாக இராது என்றும் சொல்கிறார் திரு ராம்குமார்.
கிரிக்கெட் போட்டிகளை நேரலையாகக் காண சந்தா செலுத்திவிட்டதாகவும் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சி இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் 25க்கும் மேற்பட்டோர் சேர்ந்து காண திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். குறிப்பாக, இந்தியா விளையாடும் போட்டிகளையும் இறுதிப் போட்டியையும் பல்கலைக்கழகத்திலுள்ள ஏதேனும் ஓர் உள்ளரங்கில் ஹாட்ஸ்டார் தளம் மூலம் திரையிடத் திட்டமிட்டுள்ளோம். அது இன்னும் உறுதியாகவில்லை,” என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர் பி ஸ்ரீசரண், 21.
போட்டிகள் இந்தியாவில் நடப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பர். இதுவே இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக பொறுப்பை அளித்திருக்கும் என்று கூறினார் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர் திருவாட்டி சஹானா நாராயணன், 38.
சில ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த இவர், இந்தியாவில் இருக்கும் அளவிற்கு இங்கே உலகக் கிண்ணப் பரபரப்பைக் காணமுடியவில்லை என்றார். கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த போட்டிகளின்போது, இந்திய அணிச் சீருடையை அணிந்தபடி, சாலையில் திரைகட்டி இறுதிப்போட்டியைக் கண்டதை இவர் நினைவுகூர்ந்தார்.
இந்தியாவிலிருப்பது போன்ற உற்சாகம் இங்கு இல்லாதபோதும் இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களால் இயன்ற அளவு கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
அனைவருமே இம்முறையும் இந்தியா சாதிக்கும் என மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.