பூனே: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 17வது ஆட்டத்தில் இந்திய அணி பங்ளாதேஷ் அணியுடன் வியாழக்கிழமை மோதுகிறது.
ஆட்டம் பூனே விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கும்.
இவ்வாரத்தில் பெரிய அணிகளை சிறிய அணிகள் தோற்கடித்து வருவதால் இந்தியா- பங்ளாதேஷ் ஆட்டம் மீது அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் அசத்தல் வெற்றிபெற்று ஆறு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா எளிதாக வெற்றிபெற்றது.
பந்தடிப்பாளர்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்படுவதால் இந்திய அணி பலம்வாய்ந்த அணியாகத் திகழ்கிறது.
மறுமுனையில் பங்ளாதேஷ் அணி மூன்று ஆட்டங்களில் விளையாடி இரண்டில் தோல்வி, ஒன்றில் வெற்றிபெற்றுள்ளது.
முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய பங்ளாதேஷ் அதன் பின்னர் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் படுதோல்வியடைந்தது.
அதனால் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு பங்ளாதேஷ் வீரர்கள் போட்டி கொடுக்கக்கூடும்.
பொதுவாக பங்ளாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படுவார்கள். ஆனால் இத்தொடரில் அவர்கள் ஓட்டங்களை அதிகமாகக் கொடுத்து தடுமாறுகின்றனர்.
அதனால் இந்த ஆட்டத்தில் புது உத்தியுடன் பங்ளாதேஷ் வீரர்கள் களமிறங்கக்கூடும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.