பெங்களூரு: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியுடன் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
பந்தடிப்பில் நல்ல துவக்கம் கிடைத்தும் இந்தியாவிடம் தோற்ற ஏமாற்றத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் முழுத்திறமையையும் காட்டக்கூடும்.
இனி வரும் ஆட்டங்கள் பாகிஸ்தானுக்கு சவால் தரும் வகையில் இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் அது கூடுதல் கவனம் செலுத்தக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலியா, இலங்கை அணியிடம் வெற்றிபெற்றது.
இருப்பினும் அதன் பந்தடிப்புப் பிரிவு பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்காமல் இருப்பது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
நல்ல பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.