கோல்கத்தா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது.
ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கோல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடக்கிறது.
இரு அணிகளும் நன்றாக செயல்பட்டு வருவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் இந்தியா வெல்லும் பட்சத்தில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ளும்.
வீழ்த்த முடியாத அணி
பந்துவீச்சில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பலமாக முகம்மது ஷமி இருக்கிறார். மூன்று ஆட்டங்களில் விளையாடிய ஷமி, 14 விக்கெட்டுகள் வீழ்த்தி எதிர் அணிகளை தனது வேகத்தால் திக்குமுக்காட வைத்து வருகிறார்.
ஷமிக்கு ஜஸ்பிரீத் பும்ராவும் நன்றாக ஒத்துழைப்பு தருவதால் இந்தியாவின் பந்துவீச்சு பலமாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் முகம்மது சிராஜ் அவ்வப்போது சரியாக பந்துவீசத் தவறுவதால் அது பின்னடைவாக உள்ளது.
சமபலத்தில் தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் பலம் அதன் பந்தடிப்பு பிரிவு. அதிரடியாகவும் நிலைமைக்கு ஏற்றவாறும் ஓட்டங்கள் குவிப்பதில் தென்னாப்பிரிக்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான ஆட்டங்களில் அது எளிதாக 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது.
இருப்பினும் இலக்குகளை விரட்டுவதில் தென்னாப்பிரிக்கா திணறுகிறது.
நெதர்லாந்திடம் இலக்கை விரட்டும் போது அது தோற்றது. பாகிஸ்தானுடனும் இறுதி வரை போராடி வெற்றிபெற்றது.
அதனால் பூவா தலையா வென்றால் தென்னாப்பிரிக்கா பந்தடிப்பை தேர்வு செய்யும் என்று கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
கோல்கத்தா ஆடுகளம் பந்தடிப்புக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் பந்தடிப்பாளர்கள் அதிக அளவில் ஓட்டங்கள் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.