கோல்கத்தா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது ஏமாற்றம் தந்தாலும் வெற்றிக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் கடைசி வரை போராடியது பெரும் மகிழ்ச்சி தருவதாக தென்னாப்பிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை கோல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது.
ஒரு கட்டத்தில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி டேவிட் மில்லரின் சதத்தால் 212 ஓட்டங்கள் எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நன்றாக விளையாடிய போதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
ஸ்டீவ் ஸ்மித் (30), ஜாஷ் இங்லிஸ் (28) ஆகியோர் பொறுப்பபுடன் விளையாடி ஓரளவு ஓட்டங்கள் குவித்தனர்.
அணித் தலைவர் பாட் கமின்ஸ் (14), மிட்சல் ஸ்டார்க் (16) ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இறுதியாக 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 215 ஓட்டங்கள் குவித்து தடுமாறி வெற்றிபெற்றது.
ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை இறுதியாட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
அகமதாபாத் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆட்டம் நடக்கவுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் சென்னையில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் மோதின. அதில் இந்தியா அபார வெற்றிபெற்றது.