நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் செல்சியை 4-1 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காட வைத்தது நியூகாசல் யுனைடெட்.
முற்பாதியாட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் முடிந்தது. அப்போது இரு குழுக்களுக்கும் இருந்த வெற்றி வாய்ப்புகளில் அதிக வித்தியாசம் தெரியவில்லை.
ஆனால், பிற்பாதியாட்டத்தில் நியூகாசல் மிகச் சிறப்பாக விளையாடி கோல்களைக் குவித்தது. கோல் எண்ணிக்கை 3-1ஆக இருந்தபோது செல்சி அணித்தலைவர் ஜேம்ஸ் ரீஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டது அக்குழுவுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான சென்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் செல்சி மிகச் சிறப்பாக விளையாடி 4-4 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. எனினும், இந்த ஆட்டத்தில் அக்குழு சோபிக்கவில்லை.
சென்ற பருவம் பெரிய அளவில் ஏமாற்றம் தந்த செல்சி இப்பருவம் கணிக்க முடியாத வகையில் விளையாடி வந்துள்ளது. அதேவேளை நியூகாசல் தொடர்ந்து தனது சீற்றத்தைக் காண்பித்து வந்துள்ளது.