அல் அம்ரத்: டி20 அனைத்துலக கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய மூன்றாவது பந்தடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நேப்பாளத்தைச் சேர்ந்த திபேந்திர சிங் ஐரி, 24.
இதற்கு முன்னர் இந்தியாவின் யுவ்ராஜ் சிங்கும் வெஸ்ட் இண்டீசின் கீரன் பொல்லார்டும் இச்சாதனையைப் படைத்திருந்தனர்.
ஓமானின் அல் அம்ரத் நகரில் சனிக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற ஆடவர்களுக்கான ஏசிசி பிரிமியர் கிண்ணப் போட்டியில் கத்தார் உடனான ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஐரி இச்சாதனையைப் புரிந்தார்.
அந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 64 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஐரி, இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அந்த ஆட்டத்தில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கத்தாரை நேப்பாளம் வென்றது.
2007 டி20 உலகக் கிண்ண ஆட்டத்தின்போது ஒரே ஓவரில் யுவ்ராஜ் சிங் ஆறு சிக்சர்களை விளாசினார். 2021ல் பொல்லார்ட் அதே சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஐரி தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை விளாசியிருந்தார். ஆனால், அது இரண்டு ஓவர்களில் நிகழ்த்தப்பட்டது.