லண்டன்: ஏஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் நூலிழையில் தப்பித்து இறுதியாட்டத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான யுனைடெட், சாம்பியன்ஷிப் பட்டியலில் போட்டியிடும் கவென்ட்ரி சிட்டியை பெனால்டிகளில் 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது. சாம்பியன்ஷிப், பிரிமியர் லீக்கிற்கு அடுத்த நிலையில் உள்ள லீக் ஆகும்.
முதலில் 3-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் முன்னணி வகித்தது. ஆனால் மனவுறுதியுடன் விளையாடிய கவென்ட்ரி 3-3 என சமநிலை கண்டது.
வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் கடைசி தருணங்களில் கவென்ட்ரியின் மாற்று ஆட்டக்காரர் விக்டர் டோர்ப் ஒரு கோலைப் போட்டார். ஆனால் ஆஃப்சைட் காரணமாக அந்த கோல் அனுமதிக்கப்படவில்லை.
யுனைடெட்டின் முதல் பெனால்டியை கசமியரோ கோட்டைவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு பெனால்டிகளில் கவென்ட்ரி தடுமாறியதால் ஒருவழியாக வென்றது யுனைடெட்.
இந்த ஆட்டம், எஃப்ஏ கிண்ண வரலாற்றில் ஆக விறுவிறுப்பான ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இறுதியாட்டத்தில் யுனைடெட் தங்களின் பரம வைரியான மான்செஸ்டர் சிட்டியைச் சந்திக்கும். சென்ற பருவத்தின் எஃப்ஏ கிண்ண இறுதியாட்டத்திலும் இவ்விரு குழுக்களும் மோதின. அதில் சிட்டி வெற்றிபெற்றது.
இம்முறையாவது வெற்றிகாண யுனைடெட் பெரிய அளவில் மேம்படவேண்டும் என்று கருதப்படுகிறது.