சென்னை: “மேட்டூர் அணைக்கு முன்பாக மேகதாதுவில் புதிய அணை கட்டுவதன் மூலம் மேட்டூர் அணையைப் பயனற்றதாகவும் பாலைவனமாகவும் மாற்ற கர்நாடக அரசு சதி செய்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேட்டூர் அணையைக் காக்க எத்தகைய தியாகத்தையும் செய்ய பாமக தயாராக உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்குத் தண்ணீர் வழங்கும் காவிரி ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில் வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை தான் உழவர்களின் தந்தை. அந்த உழவர்களின் தந்தைக்கு இன்று 90ஆம் பிறந்தநாள்.
1924ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் 1934-ஆம் ஆண்டில் நிறைவடைந்து அந்த ஆண்டின் ஆகஸ்ட் 21ஆம் நாள் தான் அணை திறக்கப்பட்டது.
89 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களைச் செழிக்கச் செய்து கொண்டிருக்கும் மேட்டூர் அணைக்கு அதன் பிறந்தநாளில் வாழ்த்துகளுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அணை கட்டப்பட்டதே நீண்ட வரலாறு ஆகும். மேட்டூர் அணை கட்டுவதற்கான திட்டங்களை முதன்முதலில் வகுத்தவர்களில் முதன்மையானவர் இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர். அவரது முயற்சி வெற்றியடையாத நிலையில், திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யாவின் வழிகாட்டுதலுடன், ஆங்கிலப் பொறியாளர்கள் எல்லீஸ், ஸ்டான்லி ஆகியோர் தலைமையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பத்தாண்டுகள் உழைத்து கட்டியது தான் மேட்டூர் அணை ஆகும்.
மேட்டூர் அணை என்பதே புரட்சியின் அடையாளம் தான். காவிரியையும், காவிரிப்பாசன மாவட்டங்களையும் கர்நாடகம் இப்போது எப்படி வஞ்சிக்கிறதோ, அதேபோல் தான், முந்தைய நூற்றாண்டிலும் மைசூர் சமஸ்தானம் வஞ்சித்துக் கொண்டிருந்தது.
காவிரியின் குறுக்கே மேட்டூர் அணையை கட்ட பல பத்தாண்டுகளாக மைசூர் சமஸ்தானம் அனுமதி அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கர்நாடகத்தின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி கட்டப்பட்டது தான் மேட்டூர் அணை ஆகும்.
மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகத்தின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.