சென்னை: திருவொற்றியூரைச் சேர்ந்தவர் அருண் (31 வயது). இவர் உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து இணையம் வழி ரூ.50 ஆயிரம், ரூ.25ஆயிரம் என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதாக கைத்தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருண், தனது வங்கிக்கணக்கை சரிபார்த்த போது ரூ.75 ஆயிரம் மாயமாகி இருந்தது. பணம் எடுக்கப்பட்ட போது கைப்பேசிக்கு ஓ.டி.பி. எண் வரவில்லை என்று கூறப்படுகிறது.
நூதன முறையில் ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு பணத்தைத் திருடியது தெரியவந்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் இணையம் வழி, வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2023 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 13,530 வங்கி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த மோசடிச் சம்பவங்களில் கிட்டத்தட்ட ரூ.30,252 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 49 விழுக்காடு அதாவது 6,659 சம்பவங்கள், கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் இணையம் வழி மின்னியல் பணப் பட்டுவாடா செய்வது மூலம் நிகழ்ந்துள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கிக் கடன் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.