சென்னை: உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்ட ஆடவர் பயிற்சியின்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை புறநகர்ப் பகுதியான அம்பத்தூரைச் சேர்ந்தவர் யோகேஷ். 41 வயதான இவர் ஆணழகன் போட்டிக்குத் தயாராகி வந்தார்.
இதற்காக தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் அவர் நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பயிற்சி முடிவடைந்த பின்னர், சோர்வாக இருப்பதாகக் கூறிய அவர், உடற்பயிற்சிக் கூடத்திலேயே உள்ள குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்ததாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் யோகேஷ், வெளியே வராததால் அங்கிருந்தவர்கள் குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு யோகேஷ் மயங்கிய நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது யோகேஷின் நண்பர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.