திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையத்தில் இருந்து அஞ்சல் வாக்குகளை தொகுதிவாரியாகப் பிரித்து அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
இம்முறை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 93,642 வாக்குள் பதிவாகி உள்ளன. அந்த வாக்குகளை தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்புவதற்கான ஒருங்கிணைந்த மையம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த மையம் தற்காலிகமாக அமைக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளுக்காக செலுத்தப்பட்ட அனைத்து அஞ்சல் வாக்குகளும் திருச்சி மையத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்தந்த தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்றும் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி இந்த வாக்குகள் பின்னர் எண்ணப்படும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில் 5,445 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளன.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அத்தொகுதியில் 239 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.