சென்னை: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெறும் வேளையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.
இந்திய நேரப்படி காலை 9 மணி (சிங்கப்பூரில் காலை 11.30 மணி) நிலவரப்படி தமிழகத்தில் 12.55 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இந்தத் தகவலை வெளியிட்டது.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாற்றால் வாக்குப் பதிவு தாமதமானதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், “அனைத்து இடங்களிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் உடனே அவை சரிசெய்யப்பட்டன. மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அதிகாரிகள் அவ்விடங்களில் சோதனை செய்துவருகின்றனர்” என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தெரிவித்துள்ளார்.