சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கியிலிருந்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய வங்கிச் சாா்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தையும் செந்தில் பாலாஜிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வங்கித் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களைப் பெறுவதற்காக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி திங்கட்கிழமை (ஏப்ரல் 22) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர், அமலாக்கத் துறை வழக்கின் அசல் ஆவணங்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய மனு குறித்து ஓரிரு நாளில் வாதங்கள் தொடரும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 25 வரை நீட்டிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் 34வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.