சென்னை: கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மாணவிகள் இருவர் தெரிவித்த புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் பரதநாட்டிய நடனக் கலைஞரும் பயிற்றுவிப்பாளளருமான ஸ்ரீஜித் கிருஷ்ணா என்பவரைக் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே கலாஷேத்ராவின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி பத்மன் என்பவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு நடனப் பயிற்றுவிப்பாளளர் கைதாகி இருப்பது கலை ஆர்வலர்கள் மத்தியில் புது விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற கலாஷேத்ரா அறக்கட்டளையானது கடந்த 1936ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் இங்கு பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கலாஷேத்ராவைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவிகள் சிலர் புகார் எழுப்பினர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை ஹரி பத்மனைக் கைது செய்தது.
இந்நிலையில், ஸ்ரீஜித் கிருஷ்ணா என்ற பயிற்றுவிப்பாளரும் பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். அவர் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இரு முன்னாள் மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
51 வயதான ஸ்ரீஜித் கிருஷ்ணா ஏப்ரல் 22 அன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் கடந்த ஜூன் மாதம் பிணை பெற்று வெளிவந்துள்ளார். பாலியல் புகார் தொடர்பில் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய மூன்று பயிற்றுவிப்பாளர்களை கலாஷேத்ரா நிர்வாகம் பணியை விட்டு நீக்கி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்த விசாரணைக் குழு ஹரிபத்மனை குற்றவாளி என்று தீர்மானித்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறக்கட்டளை நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டது.
கடந்த ஆண்டு முதல் கலாஷேத்ரா மாணவிகள் மேற்கொண்ட போராட்டத்தை அடுத்து பாலியல் புகார்கள் குறித்து உடனுக்குடன் விசாரிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தது.
இந்நிலையில், பாலியல் தொல்லை தொடர்பாக மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.