தமிழர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கே தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒரு முக்கியமான பண்டிகை என்று தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூகக் கொள்கைகளின் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ வருணித்துள்ளார்.
லிட்டில் இந்தியாவில் பொங்கல் ஒளியூட்டை இன்று தொடங்கி வைத்து அமைச்சர் பேசினார்.
பொங்கலை முன்னிட்டு புக்கிட் திமா-லிட்டில் இந்தியா சந்திப்பில் தொடங்கி ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வரையிலான சிராங்கூன் சாலை இன்று மாலை ஒளியூட்டப்பட்டது.
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை, 29 நாட்களுக்கு வண்ண விளக்குகள் பிரகாசிக்கவுள்ளன.
கொவிட்-19 சூழலிலிருந்து சிங்கப்பூர் மீட்சி அடைந்து வந்த பிறகு நடைபெறும் முதல் பொங்கல் திருநாளாக இதுவாக இருக்கும்.
“கிருமிப் பரவலை வெற்றிகரமாக நாம் கடந்து விட்ட சூழலில், லிட்டில் இந்தியாவில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளின் வரவும் அதிகரித்து வருகிறது.”
“கொவிட்-19 பரவலின்போது கடைகளில் வணிகத்துக்குப் பல சவால்கள் நிலவின. தைத் திருநாள் வர்த்தகர்களுக்கு ஓர் இனிய தொடக்கமாக இருக்கும். இந்த இன்பத் திருநாளை நாம் கொண்டாடும் அதே நேரத்தில் இல்லாதவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்,” என்றார் திரு லீ.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஏற்பாட்டில் பொங்கல் ஒளியூட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் ஒளியூட்டு விழா, முதல் முறையாக, கிளைவ் ஸ்திரீட்டில் இருக்கும் ‘பொலி’ திறந்த வெளியில் பெரியளவில் இடம்பெற்றது.
அங்கு அமைக்கப்பட்ட கூடாரத்தில் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சியை
கிட்டத்தட்ட 300 பேர் கண்டு களித்தனர்.
திரு லீயுடன் பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, நிதிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜாவும் மற்றொரு சிறப்பு விருந்தினராக ஒளியூட்டு விழாவில் கலந்து கொண்டார்.
லிஷாவும் அதன் பல பங்காளி அமைப்புகளும் கைகோத்து ஏற்பாடு செய்துள்ள பொங்கல் கொண்டாட்டங்கள், வேளாண்மையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.
தமிழ் மரபுகளைப் பொதுமக்கள், சுற்றுப்பயணிகள், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோருக்கு சென்று சேர்ப்பது கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
பொங்கல் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி மேல் விவரங்களை அறிய, www.pongalsg.com, http://indianheritage.org.sg இணைய பக்கங்களுக்கு செல்லலாம்.