இந்தியாவின் கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாட்டு முயற்சிக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையும் (சிக்கி) லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் (லிஷா) இணைந்து புதிய நிவாரண நிதி திரட்டுத் திட்டத்தைத் தொடங்கின.
இந்நிதி திரட்டு முயற்சியின் முதற்கட்டமாக, சிக்கியும் லிஷாவும் இணைந்து பொதுமக்கள், சமூக அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து $1 மில்லியன் தொகையைத் திரட்டியுள்ளன.
சிக்கி வளாகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இந்த நன்கொடைக்கான காசோலை, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்பட்டது. இத்தொகை கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான மருத்துவக் கருவிகளையும் சுவாச சாதனங்களையும் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.
இவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களுக்கு அனுப்பப்படும். இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ‘ஸூம்’ சந்திப்பு தளம் வாயிலாக இணைந்தார்.
தமது உரையில் திரு தியாகராஜன், “தொடர்ந்து மேம்பாடு காணும் சிங்கப்பூரின் முனைப்பு என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
“பல நூறாண்டுகளாக நிலைத்திருக்கும் தென்கிழக்காசிய தமிழர்களின் உறவின் அடிப்படையில் என்றைக்குமே சிங்கப்பூருக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவு நீடித்து நிலைத்திருக்கும்,” என்றார்.
சிங்கப்பூர் அளித்துள்ள உதவிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், தமிழ் நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து பொறுப்புடைமையிலும் மக்களுடனான தகவல் வெளிப்படைத்தன்மையிலும் கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார். எதிர்காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் சிங்கப்பூருடன் இணைந்து வர்த்தக உடன்பாடுகளில் இணைய தமது அரசு ஆவலாக உள்ளது என்றாரவர்.
“கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இப்போது தமிழகத்தில் அன்றாடம் அதிக அளவிலான கொவிட்-19 சோதனைகளை மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
இந்திய சமூகத்தைத் தாண்டி, மற்ற இனத்தவர்களும் மனிதாபிமான முறையில் இந்த நிதி திரட்டு முயற்சிக்கு பங்களித்துள்ளது மனதை நெகிழச் செய்கிறது என்று குறிப்பிட்டார்,” சிக்கியின் தலைவர் டாக்டர் டி.சந்துரு.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பெஞ்சமின் வில்லியம், கிருமித்தொற்று நிலவரம் மேம்படும் வரை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட சங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்றார். நேப்பாளம், பங்ளாதேஷ், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கும் சங்கம் உதவி வருகிறது.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு உதவ துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இதர அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.