கரிம சேவைகளுக்கான மையமாக உருவெடுப்பதற்கான முயற்சிகளில் சிங்கப்பூர் ஈடுபட்டு வரும் வேளையில் பசுமைப் பொருளியல் துறையில் வேலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கரிமக் குறைப்பில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகங்களுக்கும் கரிம ஒழிப்புக்கான உத்திகளுக்கும் உதவ இந்த வேலைகள் தேவைப்படுகின்றன.
இந்தத் துறையில் குறிப்பிட்ட சில வேலைகளில் வெளிநாட்டினரை அமர்த்த விரும்பும் நிறுவனங்களுக்கு புதிய நடைமுறை கைகொடுக்கும்.
செப்டம்பர் 1 முதல் புள்ளிகள் அடிப்படையிலான எம்பிளாய்மண்ட் பாஸ் கட்டமைப்பு அறிமுகம் கண்ட பின்னர் அவர்களை வேலைக்கு எடுப்பதில் பசுமைப் பொருளியல் துறை நிறுவனங்களுக்கு சிரமம் இருக்காது.
எம்பிளாய்மண்ட் பாஸ் பெறுவதற்கான படிப்புத் தகுதி, சம்பள வரம்பு ஆகியவற்றோடு நான்கு விதமான வேலைகளுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும்.
கரிம பொருள் சரிபார்ப்பவர் மற்றும் சிறப்புத் தணிக்கையாளர், கரிம விற்பனையாளர், கரிம திட்ட மேலாளர், கரிமத் தரப் பகுப்பாய்வாளர் ஆகிய வேலைகள் அவை.
சிங்கப்பூரில் தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் திறன் பற்றாக்குறை நிலவும் 27 விதமான வேலைகளுக்குரிய எம்பிளாய்மண்ட் பாஸுக்கு ஊக்கப்புள்ளிகள் வழங்கும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த 27 வேலைகளில் மேலே சொன்ன நான்கு வேலைகளும் அடங்கும்.
இதன் தொடர்பாக குறைந்தபட்சம் 12 விதமான வேலைகள் ‘மைகரியர்ஸ்ஃபியூச்சர்’, ‘லிங்கிட்இன்’ போன்ற தளங்களில் கண்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது. இவற்றில் பெரும்பாலானவை கரிம தணிக்கை தொடர்பானவை.
சுற்றுச்சூழல் தணிக்கை நிறுவனமான TUV SUD, எரிபொருள் பெருநிறுவனமான BP மற்றும் வெவ்வேறு வேலை நியமன முகவைகள் இந்த வேலைகளை விளம்பரப்படுத்தி இருந்தன.
கூடுதல் புள்ளிகளை ஈர்க்கும் நான்கு வேலைகள், நிறுவனங்களுக்கான உத்திகளை வகுக்கவும் கரிம ஒழிப்பு உத்திகளை அமல்படுத்தவும் உதவக்கூடியவை என்று கேபிஎம்ஜி நிறுவனத்தின் பங்காளியும் இஎஸ்ஜி பிரிவின் தலைவருமான ஷரத் சோமானி கூறினார்.
“உதாரணத்திற்கு, கரிம தரப் பகுப்பாய்வாளர் கரிம பயன்பாட்டைக் குறைப்பதில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அறிவியல் சார்ந்த இலக்குகளை வகுக்க உதவுவார்.
“அதேநேரம், அந்த இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த கரிம திட்ட மேலாளர் கைகொடுப்பார்.
“கரிம வெளியேற்றத்திற்கு ஈடாக கரிம சலுகைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கரிம விற்பனையாளர் உதவுவார்.
“அதேபோல, ஒரு நிறுவனம் கரிம வெளியேற்றத்தை எந்த அளவுக்கு சிறப்பான முறையில் குறைக்கலாம் என்பதற்கான வழிவகைகளை கரிம பொருள் சரிபார்ப்பு மற்றும் சிறப்புத் தணிக்கையாளர் வகுத்துத் தருவார்,” என்று திரு ஷரத் விளக்கினார்.
கரிம சேவை மையமாக சிங்கப்பூர் உருவெடுக்கும்போது இந்த வேலைகள் மிக அவசியமானவையாக மாறிவிடும் என்றார் அவர்.
கரிமநீக்கத் துறை என்பது US$10 டிரில்லியன் (S$13.3 டிரில்லியன்) மதிப்புள்ள சந்தை என்று கேபிஎம்ஜி மதிப்பிடுகிறது.
‘சிங்கப்பூர் பசுமைத் திட்டம்’ வழியாக கரிம சேவைகளுக்கான சுற்றுச்சூழல் முறையை வகுக்க நாடு இலக்கு கொண்டுள்ளதாகக் கூறிய திரு ஷரத், இத்துறை தொடர்பான 50,000 புதிய வேலைகள் 2030ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்பட லாம் என்றார்.
பசுமைப் பொருளியல் சந்தை அனுகூலங்களைப் பெற போட்டியிடும் நாடுகளுக்கு நிகராக, உள்ளூர் திறனாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் வெளிநாட்டுத் திறனாளர்களை ஈர்ப்பதும் சிங்கப்பூருக்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.
இது புதிய துறை என்பதால் வேலை தேடும் பலருக்கு பசுமைப் பணிகள் பற்றித் தெரிந்திருக்கவோ தாம் அதற்குத் தகுதியானவரா எனத் தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லை என்று ‘ராண்ட்ஸ்டேட்’ ஆள்நியமன நிறுவனத்தின் ஆசிய பசிபிக் நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஜெயா தாஸ் கூறினார்.
கரிம சேவைகளுக்கான மையமாக உருவெடுக்கும் சிங்கப்பூர்